தமிழ் சஙகத்தில்

வியாழன், நவம்பர் 27, 2008 | 0 Comments

----.மலர் சபாபதி
========================
04 ஏப்ரல் 08
எழுத்துக்கூடத்தின் 39 வது சந்திப்பு - ஒரு பார்வைஇடம்: திரு. ஜெயசீலன் அவர்கள் இல்லம்கதாவிலாசம்: இந்த வாரம் எடுத்துக் கொள்ளப்பட்ட கதை "கயிற்று ஊஞ்சல்". முதியோர் இல்லம் ஒன்றின் அன்றாட நடவடிக்கைகள் பற்றிய கதை. இயல்பாகத் தொடங்க வேண்டிய காலைப் பொழுது கொஞ்சம் இறுக்கமாகத் தொடங்குகிறது இந்த முதியோர் இல்லத்தில். வயதான காலத்தில் உறவுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்த வந்த முதியோர்கள் நிறைந்திருந்த இல்லம் அது. அவர்கள் அறை அமைப்பு முதல் இல்ல அமைப்பு வரையான விளக்கங்கள் அவர்கள் தனிமையையும், ஒரு இயந்திரகதியான வாழ்க்கையையும் வலியுறுத்துவதாய் விளங்குகின்றன. உணவருந்துவது முதல் உறங்கப்போவது வரை துன்பம் இடைவிடாது இழையோடும் துக்கமான வாழ்க்கை முறை அவர்களுடையது. ஒரு மனிதனைப் புறக்கணிப்பதும், தனிமைப்படுத்தப்படுவதும்தான் அவனுக்குத் தரும் மாபெரும் தண்டனை. முதியோர் பலர் தற்சமயம் இது போன்ற இல்லங்களில் அனுபவித்து வரும் துன்பம் பற்றி இயல்பாகப் பேசும் கதை இது.இதையொட்டிய கருத்தில் கதாசிரியர் தமயந்தி எழுதிய "அனல் மின் நிலையங்கள்" கதை பேசப்படுகிறது. தூத்துக்குடி கடற்கரையில் உருவாக்கப்பட்ட அனல் மின் நிலையத்தால் மீன் பிடித் தொழில் பாதிக்கப்படுகிறது. எனவே செபஸ்தியான் என்ற மீனவனின் தொழிலும் பாதிக்கப்படுகிறது. அவன் தாயாரை உடன் வைத்திருப்பது இனிமேலும் கஷ்டம் என்று மனைவி கூறிவிட, அவள் வற்புறுத்தலின் பேரில் தாயாரை அண்ணன் வீட்டில் விட்டு வரப் புறப்படுகிறான் செபாஸ்தியன். அவன் மதினி அவர்களை வீட்டுக்குள்ளேயே விடவில்லை. திரும்ப அழைத்து வரும் வழியில், கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் தாயாரை உட்கார வைத்துவிட்டு, தூத்துக்குடி பேருந்து வருகிறதா என்று பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுத் தூத்துக்குடி பேருந்தில் தனியாக ஊர் செல்கிறான் செபாஸ்தியான்.கதாசிரியர் பற்றிய குறிப்பு:ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள தமயந்தி, திருநெல்வேலிக்காரர். இவருடைய முதல் கதை ஆனந்த விகடனில் வெளியானது. 'தமயந்தி சிறுகதைகள்' என்பது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. 'அக்கக்கா குருவிகள்' என்கிற இவரது சிறுகதைத் தொகுப்பு மிகவும் முக்கியமானது. தற்போது இவர் திருநெல்வேலியில் சூரியன் எஃப். எம் வனொலியில் பணியாற்றி வருகிறார்.கலந்துரையாடல்:முதியோர்கள் பற்றிய இந்த இரு கதைகளும் அனைவரின் மனதையும் நெகிழ வைப்பதாய் இருந்தது. பேராசிரியர் மாசிலாமணி, திரு. ஜெயசீலன், திரு. இளங்கோ மற்றும் திரு.மகேஷ் அவர்கள் தாம் கண்ட / கேள்விப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். வேலை நிமித்தம் மட்டுமன்றிப் பல்வேறு காரணங்களுக்காகவும் ஆதரவற்ற தனிமையில் முதியோர் வாழும் நிலை அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியதை, அவர்கள் பகிர்தல் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.
.

தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!
தமயந்தி

எஸ்.ராமகிருஷ்ணன்
கயிற்று ஊஞ்சல்
ஈரோட்டில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றுக்குப் பார்வையாளராகச் சென்றிருந்தேன். நகரை விலக்கிய சிறிய கிராமம் ஒன்றின் மரங்கள் அடர்ந்த பகுதியில் தனித்திருந்தது. உள்ளே நுழைகையில் இலைகளுக்குள் ஒளிந்துகொண்டு பறவைகள் சப்தமிடுகின்றன. ஐம்பதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியிருந்தார்கள். காப்பகத்துக்குள் நுழைந்தபோது, அது மாலை பிரார்த்தனை நேரம்.
பனிச் சிற்பங்களைப் போல உறைந்துபோன நிசப்தத்தில் முதியவர்கள் வணங்கியபடி நின்றிருந்தனர். உதடுகள்கூட அசையவில்லை. பிரார்த்தனைப் பாடலைப் பாடும் பெண்ணின் குரல் நடுங்கிக்கொண்டு இருந்தது. பிரார்த்தனை முடிந்து வெளியேறும் பலரது கண்கள் கசிந்திருந்தன. அழுதிருக்கிறார்கள். அதைத் துடைத்துக்கொள்ளக்கூட மனதற்று நெற்றி நிறைய திருநீறும் வேதனையை அடக்கிய முகமுமாக அவர்கள் மரத்தடிக்கு வந்து சேர்ந்தார்கள்.
அநேகமாக அவர்களைத் தேடிப் பார்வையாளர்கள் வருவது வெகு அபூர்வம் என்பது புரிந்தது. குழந்தைகள் ஒருவரையருவர் இடித்துக்கொண்டு உட்காருவதுபோல நெருக்கமாக உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக்கொண்டபோது, ஒன்றிரண்டு முகங்களில் வயதை மீறி கூச்சமும் வெட்கமும் கலந்து வெளிப் பட்டது.
என்ன பேசுவது என்று தெரியவில்லை. மாலை வெயில் மரங்களுக்கிடையில் கசிந்துகொண்டு இருந்தது. ரெம்ப்ராண்டின் ஓவியம் ஒன்றின் முன் அமர்ந்திருப்பது போல, இமைக்காத கண்களும் சலனமற்ற முகமுமாக என் முன் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்தேன். பெரும்பான்மையான முதியவர்களின் கண்கள் உலர்ந்துபோயிருந்தன.
பேச்சை எங்கிருந்து துவங்குவது என்று யாருக்கும் தெரியவில்லை. எதையோ மறந்துபோனவரைப் போல ஒரு முதியவர் தன் அறைக்குள் சென்று, கண்ணில் விடும் சொட்டு மருந்தை எடுத்து வந்து இன்னொரு வயோதிகரிடம் தந்தார். அவரும் பாட்டிலைத் திறந்து சொட்டு மருந்து போட்டுவிட்டார். பிறகு இருவரும் பால்யத்திலிருந்து பழகி வந்த இரண்டு சிறார்களைப் போல ஒருவர் தோள் மீது மற்றவர் கையைப் போட்டுக் கொண்டு அமர்ந்தனர்.
எங்கிருந்தோ ஒரு மயில் அகவும் ஓசை கேட்டது. முதல்முறையாக ஒரு பாட்டி லேசான புன்னகையோடு சொன்னார்… ‘‘மயிலு சார்!’’ மற்றவர் களும் தலையாட்டிக்கொண்டார் கள். ஆனால், பேச்சு துளிர்க்கவே இல்லை. தண்ணீர் வற்றிப்போன கிணற்றைப் போல சொற்களும் மனதில் வற்றிப் போய்விட்டனவா?
மரத்தடியில் அமர்ந்திருந்த பெண் களில் ஒரேயருவர் மட்டும் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயமளவு குங்குமம் வைத்திருந்தார். அவர் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் குனிந்த படியே இருந்தார். அவரது பெயரைக் கேட்டபோதும் தரை பார்த்தபடியே பதில் சொன்னார்.
நரைத்த தலையும் சாந்தமான முகமுமாயிருந்த ஒரு பெண்மணி மட்டும் எழுந்து நின்று, பாதி மலையாளம் கலந்த தமிழில் சொன்னார்… ÔÔநான் பாரத் சர்க்கஸில் வேலை செய்தவளாக் கும். எங்க சர்க்கஸ் பல நாடுகள் சுற்றி வந்திருக்கு. எந்தெந்த தேசம் என்று பெயர் மறந்துபோச்சு. பார் விளையாடுறதுல நான் எக்ஸ்பர்ட். பன்னிரண்டு வயசிலே சர்க்கஸ்ல சேர்ந்தது. இருபத்தஞ்சு வருசம் அதில இருந்தாச்சி… இப்பவும் கயிற்றிலே நல்லா ஆடுவேன். ஆனா, வயசாகி தலை நரைச்சவள் பார் ஆடுறதை யார் பாக்கிறது சொல்லுங்கோ… அதான் என்னை வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டாங்க. சர்க்கஸ்ல இருந்துட்டதால சொந்தம் பந்தம் எல்லாம் விட்டுப் போயாச்சு. அதுனால, வெளியே வந்தப்புறம் எங்கே போறதுன்னு தெரியலை. சர்க்கஸ் கயிற்றிலே ஊஞ்சலாடினப்பகூட பயமா இல்லை. ஆனா, அங்கிருந்து வெளியே வந்தப்புறம்தான் பயம்னா என்னன்னு தெரிய ஆரம்பிச்சது. யார் வீட்லயும் இருக்க முடியலை. எங்கே போறதுன்னும் தெரியலை. அதான் இங்கே வந்து சேர்ந் துட்டேன். சர்க்கஸ்ல ட்ரெயினிங் எடுத்த வளாக்கும்! ஒரு நோய்நொடி கிடையாது. ஆயிரம் தடவை கை தட்டு வாங்கியிருக்கேன். இப்போ எனக்குன்னு யாருமில்லை. தனியா என் கையை நானே தட்டிக்கிட வேண்டியதுதான்’’ & பேச்சைப் பாதியில் நிறுத்திக்கொண்டு, அமைதியாகி விட்டார். மிருகங்களுக்குக்கூட அடைந்து கிடக்க ஒரு கூண்டு இருக்கிறது. ஆனால், சர்க்கஸில் வேலை செய்து வெளியேற்றப்பட்டவளுக்கு போக்கிடமில்லை என்பது மனதை உறுத்துவதாக இருந்தது. இருட்டு ஒரு புகையைப் போல எங்கும் பரவத் துவங்கியது. அவர்கள் மரத்தடியிலிருந்து கலைந்து போகத் துவங்கினார்கள்.
உள்ளே வரிசையாக படுக்கைகள் போடப்பட்டு இருந்தன. சிறிய மரக் கட்டில், அதன் ஓரத்தில் சிறிய மர அலமாரி. அதில் துவைத்து மடித்துவைத்த துணிகள். ஒரு மெழுகுவத்தி, தீப்பெட்டி. கொசுவத்திச் சுருள். நாலைந்து பழைய கடிதங்கள். அழுகைக் கறை படிந்த தலையணைகள். விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி அவரவர் கட்டிலில் ஏறிப் படுத்துக்கொண்டார்கள். இன்றைய நாள் முடியப்போகிறது. ஒவ்வொரு நாளையும் அவர்கள் மனதுக்குள்ளாகக் கணக்கெடுத்துக் கொள்கிறார்கள். உறக்கமும் விழிப்புமற்ற ஒரு சயன நிலையில் அவர்கள் கண்கள் சொருகியிருக்கின்றன.
காப்பகத்தின் நிர்வாகி அனைவரை யும் சாப்பிட அழைத்தார். நிழல்களைப் போல அவர்கள் நடந்து போகிறார்கள். உணவருந்தும் சப்தம்கூட கேட்கவில்லை. பின் மெதுவாக படுக்கைக்குத் திரும்பு கிறார்கள். ப்ளாக்போர்டில் ஈரத் துணியை வைத்து அழித்தபடியே நிர்வாகி சில பெயர்களை எழுதுகிறார். அது என்னவென்று கேட்டபோது, ÔÔஒவ்வொரு நாளும் சிலர் மௌன விரதம் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதன்படி, நாளைக்கு மௌன விரதம் இருப்பவர்களின் பெயர்கள் இவைÕÕ என்று சொன்னார்.
ஏற்கனவே மௌனத்தின் தாழிக்குள் வீழ்ந்து கிடப்பவர்கள்தானே, இனி எதற்காக தனியே ஒரு நாள் மௌன விரதம் என்று கேட்க நினைத்தேன். பார்த்துக்கொண்டே இருந்தபோது நாள் முடிந்து இரவின் நீண்ட பொழுதுக்குள் யாவரும் ஒடுங்கிக் கொண்டு விட்டார்கள். உறக்கத்தில் அவர்களுக்குக் கனவுகள் வருமா? நிச்சயமாகத் தெரியவில்லை.
பிரார்த்தனைகளும் மௌன விரதமும் அவர்களுக்கு என்ன தந்துவிட முடியும்? அவர்கள் யாசிப்பது சாப்பாட்டை அல்ல, மனித உறவை! அதுவும் ஒரே ஒரு ஆள் தன்னைப் புரிந்தவர் இருந்தால்கூடப் போதும், சமாதானமாகி விடுவார்கள். ஆனால், அதுகூடச் சாத்தியமாவதில்லை.
ஒரு மனிதனைப் புறக்கணிப்பதும், தனிமைப்படுத்திவிடுவதும்தான் அவனுக்குத் தரும் மாபெரும் தண்டனை. மகாபாரதத்தில்கூட கௌரவ சேனையின் கடைசி ஆளாக மிஞ்சும் அஸ்வத்தாமா, பாஞ்சாலியின் ஐந்து பிள்ளைகளையும் கொன்று விடுகிறான். உத்திரையின் கர்ப்பத்திலிருக்கும் சிசுவின் மீதுகூட அம்பு எய்கிறான். அவனுக்குக் கிடைக் கும் தண்டனை விசித்திரமானது.
உலகில் நண்பர்கள் யாருமற்றுப் போய், சாவும் இல்லாமல் அவன் சுற்றியலைய வேண்டும் என்று சாபம். வில்லாளிகளில் இந்திரனுக்குச் சமமானவனும் துரோணரின் புத்திரனு மான அஸ்வத்தாமா, இந்த கடுமையான தண்டனையைச் சுமந்துகொண்டு சாவை விலக்கியவனாக தனிமையில் இன்றும் அலைந்துகொண்டு இருக்கிறான் என்கிறது மகாபாரதம்.
சிறுவயதில் நமக்கிருந்த பிரச்னை தூக்கத்தில் சிறுநீர் கழித்துவிடுவது. முதுமையிலும் அதுதான் பிரச்னை என்று மார்க் ட்வைன் ஒரு முறை எழுதியிருந்தார். நிஜம்தானே! குழந்தை கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து தங்கள் கவனத்தை ஈர்த்துக்கொண்டு விடுகின்றன. முதுமையில் அதற்கும் சாத்தியமில்லை. இந்தத் தனிமைக்குப் பயந்துதான் பல வயோதிகர்கள் அவமானங்களைச் சகித்துக் கொண்டு வாழப் பழகிவிடு கிறார்கள். குடும்பங்களில் குழந்தை கள் அளவுக்கு வயோதிகர்களும் வசையும் திட்டும் வாங்குவது அன்றாடமாகிவிட்டது.
வாழ்வுக்கான போராட்டம் சிக்கலாகத் துவங்கியதும் உறவுகளும் நம்மைச் சுற்றிய மனிதர்களுடன் உள்ள நெருக்கமும் சிக்கலாகிவிடு கின்றன. இதைத் தனது கதையன்றின் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் தமயந்தி. இவரது Ôஅனல்மின் நிலையங்கள்Õ என்னும் கதை குடும்ப உறவுகளின் உண்மையான முகங்களை வெளிப்படுத்துகிறது. தமயந்தி, 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிவரும் தீவிர படைப்பாளி. இவரது கதைகள் உழைக்கும் பெண்களின் போராட்டங் களைப் பிரதிபலிக்கின்றன. சுய அடையாளமற்றவளாக பெண் நடத்தப்படுவதைச் சகித்துக்கொள்ள மறுக்கும் எதிர்ப்புக் குரல் இவர் கதைகளின் அடிநாதமாக உள்ளது.
‘அனல் மின் நிலையங்கள்’ கதை ஒரு மீனவக் குடும்பத்தின் வாழ்க்கைப் பாட்டினை விவரிக்கிறது. குறிப்பாக, தூத்துக்குடி கடற்கரையில் உருவாக்கப் பட்ட அனல்மின் நிலையத்தின் காரண மாக அங்குள்ள மீன்பிடித் தொழில் எப்படி மறைமுகமாகப் பாதிக்கப் பட்டுள்ளது என்பதைப் பற்றியகதை.
கடலில் ஆஷ்டைக் எனப்படும் சாம்பல் களம் அமைக்கப்பட்டு அதன் வழியாக அனல் மின் நிலையத்தின் கழிவு நீர் கடலில் கலந்துவிட ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் காரணமாக சாம்பல் கற்கள் பாறை போலாகி இறுக்கமாகிவிடு கின்றன.
இந்தக் கழிவின் பாதிப்பால் இனப்பெருக்கமற்று மீன்கள் குறைந்தும் அழிந்தும் போய்விடு கின்றன. இதனால் அவர்களின் பிரதான மீன் பிடிப்பாக இருந்த சிங்கரால் பிடிப்பு அறவே பாதிக்கப் பட்டுவிடுகிறது. அப்படி பாதிக்கப் படும் ஒரு மீனவன்தான் செபஸ்தியான். அவனுடைய தாய்க்கு முன்பு போல வீட்டில் வளமை இல்லை என்ற குறைபாடு இருந்துகொண்டே இருக்கிறது. இதனால் அவள் தினமும் செபஸ்தியானின் மனைவி கிரேஸோடு சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறாள்.
ஒரு நாள் கிரேஸின் அண்ணன் விருந்தாளியாக வருகிறான். அன்றும் அந்தச் சண்டை நீள்கிறது. இனிமேல் கிழவியை தங்களோடு வைத்துச் சமாளிக்க முடியாது என்று கிரேஸ் அழுது கூப்பாடு போடுகிறாள். வழியில்லாமல் செபஸ்தியான் அம்மாவைத் தன் அண்ணன் வீட்டில் கொண்டு போய் விட்டுவிடலாம் என்று முடிவு செய்கிறான். ஆனால், அம்மா போக மறுக்கிறாள். கட்டயாப்படுத்தி விருதுநகரில் உள்ள அண்ணன் வீட்டுக்கு கூட்டிப் போகிறான் செபஸ்தியான்.
அங்கே அவன் மதினி அவர்களை வீட்டுக்குள்ளேயே விட மறுக்கிறாள். என்ன செய்வது என்று மறுபடியும் அம்மாவைத் தன் வீட்டுக்கே அழைத்து வருவதற்காக பஸ் ஏறிக் கூட்டி வருகிறான். வழியில் அம்மாவின் பசிக்குத் தேவையான பிஸ்கட்டும் டீயும் வாங்கித் தருகிறான். பஸ் கோவில்பட்டிக்கு வந்து சேர்கிறது. அங்கே பஸ் ஸ்டாண்டில் அம்மாவைத் தனியே உட்கார வைத்துவிட்டு, தூத்துக்குடி பஸ் இருக்கிறதா என்று பார்த்து வருவதாகச் சொல்லி, புறப்பட்டுக் கொண்டு இருக்கும் ஒரு தூத்துக்குடி பஸ்ஸில் ஏறி அவளுக்குத் தெரியாமல் ஊருக்கு கிளம்பிவிடு கிறான் செபஸ்தியான் என்பதோடு கதை முடிந்து விடுகிறது.
பயன்படுத்தி எறிந்த காலி டப்பாக்கள், பழைய காகிதங்களுக்குக்கூட ஏதோ ஒரு விலை, மதிப்பு இருக்கிறது. ஆனால், வயோதிகத்துக்கு அந்த மதிப்புகூட இல்லாமல் போய்விட்டிருக்கிறது. காலம் வயோதிகத் தின் பட்டியலில் நம் பெயரையும் ஒரு நாள் எழுதும் என்பதை நாம் மறந்துவிடுவதுதான் காரணமா?
ஆங்கில இலக்கி யத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள தமயந்தி, திருநெல்வேலிக்காரர். இவருடைய முதல் கதை 1985lஆனந்த விகடனில்வெளி யானது. தமயந்தி சிறுகதைகள் என்பது இவரதுமுதல் சிறுகதைத் தொகுப்பு, அக்கக்கா குருவிகள் என்கிறஇவரது சிறுகதைத் தொகுப்பு மிகவும் முக்கியமானது. தற்போது இவர் திருநெல்வேலியில் சூரியன் எஃப்.எம் வானொலியில் பணியாற்றி வருகிறார்

http://pitchaipathiram.blogspot.com/2006_03_01_archive.html

திங்கள், நவம்பர் 24, 2008 | 0 Comments

புதியபார்வை 16-28, 2006 இதழில் 'மழைக்கால மரணங்கள்' என்றொரு சிறுகதை தமயந்தி என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நான் படித்த மிகச்சிறந்த சிறுகதையாக இதைக் குறிப்பிடுவேன். தமயந்தியின் சில சிறுகதைகளையும் கவிதைகளையும் ஏற்கெனவே படித்திருக்கிறேன். கவிதையும் உரைநடையும் மிக அழகாக இந்தப் படைப்பில் கைகோர்த்திருக்கிறது. ஆனானப்பட்ட வைரமுத்துவே இந்த விஷயத்தில் தடுமாறியிருக்கிறார் என்பதை அவரது ஆரம்ப கால நாவல்களை படித்தால் விளங்கிக் கொள்ளலாம்.'எனது மரணம் ஒரு மழைக்காலத்தில் நிகழக்கூடாது....' என்று ஆரம்பிக்கும் இந்தச் சிறுகதை கவிதையின் இயல்பான வாசனையோடு நகர்கிறது. .... மழையடிக்கும் போது வீட்டு வாசல்களில் விரிக்கப்பட்டிருக்கும் குடைகள் நீர் வடிந்தபடியே இருப்பதைப் பார்த்திருக்கிறேன் என்பதால் என் மரணத்திற்கு வரக்கூடிய சுமார் முந்நூறுலிருந்து ஐநூறு நபர்கள் எங்கள் வீட்டு வாசலில் விரிக்கும் குடைகள் எனக்காக அழும்....." போன்ற வரிகளிலிருந்து இதை உணரலாம். சிறுகதையின் கடைசி வரி, 'மழை எனக்குப் பிடித்திருக்கிறது என்பது மட்டும் உண்மை' என்று வாசகனுக்கு சிறிய ஆச்சரியத்தை தருவதோடு முடிகிறது.சாவகாசமான நேரம் கிடைக்கும் போது முழுக்கதையையும் உள்ளிட முயற்சிக்கிறேன்.

விமர்சனம்

திங்கள், நவம்பர் 24, 2008 | 0 Comments

பொறிஇயல், தொழில் நுட்பம், நூற்பாலைகள், உயர்கல்வி, ஆன்மீகம் என்று பல திறப்பட்ட துறைகளில் முன்னேற்றம் கண்டு முன்னோடியாக விளங்கும் கோவை நகருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், மொழியாக்கத் துறையில் முனைந்து தரமான நூறு தமிழ்ச் சிறுகதைகளை ஐந்து தொகுதிகளிலாக இந்திக்குக் கொணர்ந்துள்ள முனைவர் வெ.பத்மாவதி உள்ளபடியே சாதனை புரிந்துள்ளார். மானவாரியாக அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொறுக்கி எடுத்த நூறு கதைகளல்ல இவை; தமக்குப் பிடித்தமான ஒரு சில எழுத்தாளர்களின் பல கதைகளுமல்ல.
இருபதாம் நூற்றாண்டின் இருபதுகளிலிருந்து தொடங்கி நீள நெடுகப் பயணித்து, இரண்டாயிரம் வரை வெளிவந்த தமிழ்ச் சிறுகதைகளிலிருந்து, திறனய்வு நோக்குடன் துல்லியமாகத் தேர்ந்தெடுத்த நூறு கதைகள். ஐந்து தனித்தனித் தொகுதிகளாக நூறு தமிழ்க் கதாசிரியர்களை இவர் ஒருசேர இந்திக்கு அறிமுகப் படுத்தியுள்ளது இதுவரையிலும் வரலாறு காணாத சாதனை. இருபதுகளின் பாரதியார், வ.வே.சு.அய்யர், அ.மாதவையா தொடங்கி இரண்டாயிரமாம் ஆண்டின் விழி.பா.இதய வேந்தன், லெட்சுமணப்பெருமாள், ர.நடராசன் வரையிலும் மூன்று தலைமுறைகளைச் சார்ந்த நூறு சிறுகதை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் வாயிலாக இதன் மூலம் இந்தி உலகுக்கு அறிமுகமாகியுள்ளனர்.
ஓர் இலக்கியப் பிரதி இணைப்பு மொழியான இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு விட்டால், அதனை பிற இந்திய மொழிகளுக்கு எளிதாகக் கொண்டு செல்ல இயலும். பழக்க _ வழக்கங்கள், பண்டிகை _ திருவிழாக்கள், பூஜை _ புனஸ்காரங்கள், நாட்டார் கதை _ பழமொழிகள், நம்பிக்கை _ விலக்குகள் போன்ற பண்பாட்டுக் கூறுகளில் இந்திய மொழிகளிடையே பரவலான ஒற்றுமைகள் இருந்து வருவதால் பரஸ்பரப் பரிமாற்றம் சேதாரமின்றிச் செவ்வையாக நடைபெற இயலும். ஆங்கிலத்தை ஊடகமாகக் கொண்டு இந்தியமொழிப் பிரதிகளை மொழி பெயர்க்கும்' அன்பர்கள் தலையைச் சொறிந்து கொண்டு நிற்கும் போது இந்திய மொழிகளிடையே நேரடி மொழியாக்கம் செய்பவர்கள் பீடுநடை போடக் காணலாம்.
இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தமிழ்ப் பத்திரிகைகளில் மராத்தி, இந்தி, வங்காள மொழிகளிலிருந்து நயமான பல சிறுகதைகளும் புதினங்களும் மொழியாக்கம் செய்யப்பட்டு பிரசுரமாயின; சில நூல் வடிவிலும் வெளி வந்தன. இவை அனைத்துமே நேரடி மொழியாக்கம் என்பது இதன் சிறப்பு அம்சம் த.நா.குமாரசாமி, கா.., ரா.விழி.நாதன் போன்ற தரமான மொழியாக்கச் செம்மல்களின் கைவண்ணத்தால், தாகூரும், காண்டேகரும், பிரேம் சந்தும் தமிழக வீதிகளில் உலாவந்தனர்; இல்லங்களில் உரையாடினர். தமிழிலிருந்தும் ஒரு சில படைப்புகள் பிற மொழிகளுக்குச் சென்றன. தமிழகத்தில் மட்டுமல்ல நாடெங்கிலுமுள்ள பல்வேறு மொழிகளிடையே சுமுகமான இலக்கியப் பரிமாற்றம் நிகழ்ந்து வந்தது. யார் செய்த தீவினையோ, மொழிவாரி மாநிலங்களின் அமைப்புக்குப் பின்னர், நாமனைவருமே சன்னல்களையும் கதவுகளையும் பிறமொழி வாடை நுழையாதபடி இழுத்துச் சார்த்திக் கொண்டோம். பரஸ்பர உறவுக்கும், நல்லெண்ணத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, வெறுப்பும் பகையும் சந்தேகப் பார்வையும் வலுக்கலாயிற்று. இந்திய மக்கள் என்ற உணர்வு போய் மொழி வழியாகப் பிரிந்து நின்றோம்.
மொழிகளிடையே போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் சாகித்திய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற மைய அரசு நிறுவனங்கள் திட்டமிட்டுச் செயலாற்றிய போதிலும், அவை வெளியிட்ட மொழி பெயர்ப்பு நூல்கள் உரிய வாசகர்களைச் சென்றடைய வழிவகை செய்யப் படவில்லை. விமர்சகமோ, மொழியாக்கத்தை இரண்டாம் தரப்படைப்பு என்று நினைத்தோ, அன்றி வேறெந்தக் காரணத்தினலோ இவற்றைக் கண்டு கொள்ள வில்லை. எழுத்தாளர்கள் தங்கள் மொழிவட்டத்திலேயே வளைய வந்தனர். பிற மாநிலங்களில் என்ன நடக்கிறது. இலக்கியத்தின் புதிய செல்நெறிகளை பிறமொழி எழுத்தாளர்கள் எப்படிக் கையாளுகிறார்கள் என்பதைப் பற்றி அறிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.
தாராள மயங்கிளினலோ, கணினி _ மின்னஞ்சல்கள் செய்யும் நவீன விந்தையினலோ அன்றி யார் செய்த தவத்தினலோ சாளரங்கள் தாமாகவே திறந்து கொண்டன. இலக்கிய உலகில் ஒரு புதிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல்வேறு மொழிக் குரல்கள் இப்போது அந்நியமாகத் தெரிவதில்லை. தமிழகத்தில் மொழியாக்கத்துக்கெனவே வெளிவரும் காலாண்டிதழ் திசை எட்டும்' எட்டுத் திக்கிலிருந்தும் கலைச் செல்வங்களைக் கொணர்ந்திங்கு சேர்க்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நெய்வேலி அருகே குறிஞ்சிப்பாடியிலிருந்து வருகிறது இந்த இதழ். வடக்கு வாசல் இதழிலும் பல சிறந்த மொழி பெயர்ப்பு சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவித்த பின்னர் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையும் செவ்வியல் தமிழினைப் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளது. பிறமொழி வல்லுநர்களின் ஆலோசனை உடன் சங்க இலக்கியங் களையும் பிற நல்ல படைப்புகளையும் இந்திக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொண்டதைத் தொடர்ந்து, இருபதாம் நூற்றாண்டின் தரம் மிக்கச் சிறுகதைகளை இந்தியில் அறிமுகப் படுத்தும் பொறுப்பினை முனைவர் வெ.பத்மாவதி ஏற்றுக் கொண்டார்.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சிப் பாதையில் பயணித்து, கதைகளின் பொமைச் சிறப்புகளின் அடிப்படையில் ஐந்து காலகட்டங்களாகப் பகுத்து, ஒவ்வொரு காலகட்டத்தின் செல் நெறிகளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் இருபது கதாசிரியர்களையும் அவர்களின் ஒவ்வொரு படைப்பையும் தேர்ந்தெடுப்பதில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வி.அரசு துணை புரிந்துள்ளார்.
முதற்கால கட்டம் (1930_1950) ஐரோப்பியச் சிறுகதைகளைத் தழுவியும், சமஸ்கிருத மரபு மற்றும் புராணங்களிலிருந்து கதைக் கருவை உள்வாங்கியும் புனையப்பட்ட கதைகள். ஒருபுறம் ஜனரஞ்சகப் போக்கு மேலோங்கி நிற்க, புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, ந.பிச்சமூர்த்தி, வ.ரா. போன்றவர்கள் புதிய பாதையை வகுத்தனர்.
இரண்டாம் காலகட்டம் (1950_65) இடது சாரிக் கருத்துகளின் தாக்கம் கொண்ட சிறுகதைகள் அரங்கேறின. இந்தப் பின்னணியில் இரண்டாம் உலகப் போருக்குப் பின் சோவியத் யூனியன் மற்றும் சீனத்திலிருந்து தோன்றி ஆசியாவெங்கிலும் பரவிய சிந்தனைகள் தமிழ்ச் சிறுகதையிலும் பிரதிபலித்தன. பாத்திரப் படைப்பிலும், கதை மாந்தர்களின் மனப்பாங்குகளைச் சித்தரிப்பதிலும் புதிய உத்திகள் கையாளப்பட்டன. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், கிருஷ்ணன் நம்பி, சுந்தர ராமசாமி ஆகியோர் இக்காலத்தில் சிறுகதையுலகில் தடம் பதித்தனர்.
மூன்றாம் காலகட்டம் (1965_1980) சிறுகதையின் களம் நகரங்களிலிருந்து கிராமப் புறங்களுக்கு மாறியது. கிராம வாழ்க்கையின் சித்தரிப்புக்கு ஏற்ப, மொழிநடையிலும் மாற்றம் ஏற்பட்டது. இலக்கிய நடைக்குப் பதிலாக பேச்சு வழக்குகள் அப்படியே பதிவாயின. இக்கால கட்டத்தின் முக்கியமான படைப்பாளிகள் ஜனரஞ்சகப் பத்திரிகைகளை விடுவித்து, சிற்றிதழ்களிலேயே தமது படைப்புகளை வெளியிட்டனர். நனவோடை உத்திகளுடன் பெண்ணியக் குரலும் பதிவானது. அம்பை, நாஞ்சில் நாடன், வண்ண நிலவன், மேலாண்மை பொன்னுசாமி முக்கியமான படைப்பாளிகள்.
நான்காம் கட்டம் (1980_1990) இலத்தீன் அமெரிக்காவின் கொரில்லாப் போர், ஆப்பிரிக்க மக்களின் கருப்பர் இலக்கியம் மற்றும் இலங்கைத் தமிழ் மக்களின் போராட்டம் ஆகியவற்றின் தாக்கத்தைக் காண்கிறோம். முந்தைய கால கட்டங்களில் ஏதேனும் ஒரு சிந்தனையோட்டம் அடித்தளமாக இருந்தது. அதற்கு மாறாக, இக்கால கட்டத்தில் ஒவ்வொரு படைப்பாளியும் அவரவருக்கான தனித்தன்மையை வகுத்துக் கொள்வதில் முனைப்பாகச் செயல்பட்டனர். பெண்ணியத்துடன் தலித்தியக் கதைகளும் முக்கியத்துவம் பெற்றன. சோ.தருமன், திலீப் குமார், தமிழ்ச் செல்வன், களந்தை பீர் முகமது, காவேரி ஆகிய எழுத்தாளர்களைக் குறிப்பிடலாம்.
ஐந்தாம் கட்டம் (1990_2000) சமூகத்தில் நசுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் தலித்தியம், பெண்ணியம் சார்ந்த கதைகள் மேலொங்கின. சோவியத் யூனியன் பிளவுண்டதைக் கண்ட மிரட்சி எழுத்தாளர்களின் பலதரப்பட்ட எதிர் வினைகளை விளைவித்தது. சோஷலிஸத் திலிருந்து மோக பங்கம் ஏற்பட்ட போதிலும் பன்னட்டு முதலாளியத்தை அடிப்படையாகக் கொண்ட உலக மயமாதலை ஏற்க முடியாத மனநிலை. வகுப்பு வாதத்தின் விஷமம் மற்றொரு புறம். ம.இராஜேந்திரன், தோப்பில் முகமது மீரான், தமயந்தி, இரா.முருகன், ப.வா.செல்லதுரை, உமாமகேஸ்வரி ஆகியோர் குறிப்பிடத் தகுந்த படைப் பாளிகள்.
ஐந்து தொகுதிகளிலும் தொடராக இணைந்துள்ள வளர்ச்சிக் கட்டங்கள் மூலமாக பிறமொழி அறிஞர்கள் தமிழ்ச் சிறுகதை வரலாற்றினை ஒட்டு மொத்தமாக அறிந்து கொள்ள இயலும். இது தவிர, இந்தியச் சிறுகதை வளர்ச்சியுடன் தமிழ்க் கதைகளின் போக்குகளை ஒப்பிட்டு இந்தி பிரசாரசபா முதுகலைப் பட்டப்படிப்பு பேராசிரியை டாக்டர் நிர்மலா எஸ்.மௌரியா ஐந்து தொகுதிகளிலும் முன்னுரை வழங்கியுள்ளது பயனுள்ளதாகத் தெரிகிறது.
இத்தனை கதைகளையும் மொழியாக்கம் செய்ததுடன் நில்லாமல், வெ.பத்மாவதி ஒவ்வொரு தொகுதியிலும் வெளிவந்த கதைகளின் சிறப்பு அம்சங்களைச் சுருக்கமாத் தொகுத்தளித்துள்ளது பாராட்டிற்குரியது. அத்துடன் அவர் தமிழ் எழுத்தாளர் பற்றிய சுருக்கக் குறிப்புகளையும் இணைத்திருந்தால் அது பிறமொழியினருக்கு மேலும் பயன் தருவதாக அமைந்திருக்கும். இதை மட்டுமே ஒரு குறை போல எடுத்துக் கூறத்தோன்றுகிறது. மற்றப்படி அட்டைப்பட வடிவமைப்பு முதல் கட்டமைப்பு, உள்ளடக்கம் எல்லாமே சிறப்பாக உள்ளன. கலை வண்ணம் மிகுந்த அட்டைப்பட வடிவமைப்பு கூட பத்மாவதியின் கைவண்ணம் தான். அதற்காக தனியான பாராட்டுகள்!
இந்திய அரசின் பொதுத்துறையிலும் பல்கலைக்கழகக் கல்லூரிகளிலும் பணியாற்றி இந்தி மொழியின் நடை வேறுபாடுகளை நன்குணர்ந்த பயிற்சி இந்த மொழியாக்கப் படைப்பெங்கிலும் பிரதிபலிக்கிறது. உள்ளபடியே இந்த ஐந்து சிறுகதைத் தொகுதிகளும் இந்திக்கு செவ்வியல் தமிழின் அன்பளிப்பு.
manibharati@yahoo.com
முனைவர் எச்.பாலசுப்பிரமணிய

தமயந்தி பத்தி வெண்ணிலா

திங்கள், நவம்பர் 24, 2008 | 0 Comments

இப்போது பெண்கள் அதிகமாக கவிதை எழுத விரும்புவதுபோலத் தெரிகிறதே?உண்மைதான். இப்போது கவிதை எழுதுகிறவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். கதை எழுதுகிறபோது அதற்கு ஓர் ஆய்வு தேவை. சிக்கலான மொழி நடையைக் கையாள வேண்டியிருக்கும். கவிதையில் அப்படியில்லை. போகிற வழியிலேயே கரு கிடைக்கும். எளிய யுக்தியில் எழுதிவிட முடியும். இதன் காரணமாக கதை எழுதுகிற பெண் எழுத்தாளர்கள் குறைவாக இருக்கலாம். இப்போது எழுதுகிற உமாமகேஸ்வரி, தமயந்தி போன்றவர்கள் கதையில் நல்ல ஆளுமை செலுத்துகிறார்கள்.
- முடிவுறாத சொற்கள் இன்னும் மீதமிருக்கின்றன!
Posted by த.அரவிந்தன் at 6:29 AM

About