வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல திருநெல்வேலிகாரங்களப் பத்தி ஒரு பதிவு படித்தேன். உண்மை தான்.எங்களுக்கு எங்க ஊரப் பத்தி பெருமை அதிகம் தான். சென்னைல இருந்தப்போ ஹாஸ்டல்ல தண்ணி வராதப்போ குறுக்குத்துறைல முங்கி முங்கி குளிச்சதும்,திருவைகுண்டம் ஆத்துல சித்தி கூட சின்னப்புள்ளல குளிச்சதும் தான் ஞாபகத்துக்கு வரும்.இன்னிக்கும் இருட்டுக்கடைக்கு முன்னால் கொஞ்சமும் லஜ்ஜை இல்லாம வரிசையாய் நிக்கிற கூட்டம் என்ன சொல்லுது? மனுஷ மனச விட நாக்கு முக்கியமானதுனா? ஆனா கூட, வழுக்க வழுக்க வாழை இலைல சூட அல்வாவ இலை லேசா கறுப்பா நிறம் மாற சாப்பிடுற ருசி இருக்கே....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...
அதே மாதிரி தான் எங்க ஊர் சொதியும். சில் நேரம் நான் வைக்கிறப்ப அது சதியாயிடும்.இதே சொதியை அப்பா இலங்கைல ஸ்டுயூனு சொல்லுவாங்கனு சொல்லுவார். அதுல கறிமசாலாலாம் சேர்த்திருப்பாங்க. அம்மா நெஞ்செலும்பு போட்டு ஸ்டியூ வச்சா நாள் பூரா சாப்பிட்டுட்டே இருக்கலாம். அதென்ன சொற்றொடர்னு தெரில நாள் பூரா சாப்பிட்டுட்டே இருக்கலாம்னு. வேற வேலயே பாக்க வேணாமா? யாராச்சும் சாப்பாட்டு ராமன் உருவாக்கிய சொற்றொடராக இருக்கலாம்.
இதே வல்லநாடு தாமிரபரணி ரொம்ப ஆழமில்லாம நிதானமா குளிக்க தோதாருக்கும்.காரையாருல காணும் பொங்கலுக்குப் போனா அங்க பொங்கி ஓடுற ஆத்துல பயந்து பயந்து தலையை நனைக்கதுக்கு அக்காமார்லாம் பயப்படுவாங்க.சில தைரியமான , கணவன்மார்களை அதட்டி உருட்டி வைக்கும் அம்மணிகள் ஆத்தோரமா உக்காந்து செம்புல கோரி கோரி குளிப்பாங்க.
இப்படி தான் இருட்டுக்கடை அல்வா பத்தி எழுத ஆரம்பிச்சு கடைசில தாமிரபரணில குளிக்கிறத பத்தி விலாவாரியா எழுதிட்டு இருக்கேன். நேத்தும் இப்படி தான் பிரபஞ்சன் பத்தி எழுத ஆரம்பிச்சு மாலன் பத்தி எழுதி முடிச்சேன்.வாழ்க்கை போலவே எங்கோ ஆரம்பிச்சு எங்கோ முடியுது எல்லாமே!
கடைசி பக்கம் தொலைந்த டைரி:மனசு சில நேரங்களில் தீவு மாதிரி ஆகி விடுகிறது. மூன்று பக்கங்களிலும் கனவுகள் சூழ்ந்திருக்க, ஒரு பக்கம் மட்டும் யதார்த்தம் நிகழும் இடம் மனமாகத் தான் இருக்கிறது. இவளின் கண்கள் வெறுமையாய் இருக்கிறது.இழப்புகள் மட்டும் வாழ்க்கை இல்லை தான். பின் ஏன் இழப்புகளே வாழ்க்கையாகி விடுகிறது.உனக்கு கூட உன் விடயங்களைப் பதிவு செய்யத் தான் அதிகம் பிடிக்கிறது.
கடைசி பக்கம் ஏன் இந்த டைரி தொலைந்து போகப் போகிறதுனு நீ யோசித்திருக்கியா எப்பவாச்சும். சத்தியமாக இல்லை. உனக்கு அதை விட தாமிரபரணி குளியல்,இருட்டுக்கடை அல்வாலாம் முக்கியம். அது சரி இப்பல்லாம் எழவு வீட்ல கூட ஆர்டர் எடுத்து சாப்பிடுராஙக, இலலையா?
இவளின் கண்கள் ஈரமாகின்றன. அப்பா தெரியுமா உனக்கு நான் படிக்கிறேன்னு அவர் நோட்ஸ் எழுதுவார்.அப்பாவுக்கு என்னைப் ப்ற்றி அதிக பெருமை உண்டு.அப்பா கூட ராயல் டாக்கீஸ்லயும்,சென்ட்ரலயும் பார்த்த படம்லாம் ம்றக்காது.அத பத்தி சாப்பிடுறப்ப அக்குவேறு ஆணிவேறா விமர்சனம் பண்ணுவோம். அடுத்த நிமிடத்து வாழ்க்கைல என்ன நடக்க போகுதுனு யாருக்குத் தெரியும்?
சமாதானபுரம் முக்குல ஒரு இனிப்புக் கடை முன்ன உண்டு, உனக்கு தெரியுமா?அங்க மைசூர்பாகு எனக்குப் பிடிக்கும்னு அப்பா சைக்கிள்ல போய் வாங்கிட்டு வருவார்.
ஒரு வாட்டி அம்மா தாத்தா யார்ட்டயோ பத்தாயிரம் ரூவா கடன் வாங்கி திருப்பித் தரலனு வீட்ல தனியாருக்கிறப்ப வந்து கேட்டாஙக. யாரும் இல்லனு சொன்னா கூட போகாம உக்காந்து பேசிட்டே இருந்தாஙக. ராபின்சன் அண்ணன் அந்த வழியா வந்தப்ப் தற்செயலா என்னடா கூட்டமா இருக்குனு வந்து இவளை கூட்டிட்டு அததை வீட்டுல கொண்டு போய் விட்டாங்க. அப்புறமா அப்பா தாத்தாவோட கடன்லாம் க்ட்டுனதும், ராபின்சன் அண்ணணுக்கு கல்யாணம் ஆகி பொண்டாட்டி பிடிக்கலனு தள்ளி வச்சதும், கொஞ்ச வருஷம் கழிச்சு ஒரு ஆக்சிடண்டுல இறந்து போனதும் அடுத்தடுத்து நடந்தது. தீவின் மூன்றுப் பக்கமும் அடுக்கடுக்காய் கடல் இருப்பது போல்...
திருநெல்வேலிகாரங்ககடைசி பக்கம் தொலைந்த டைரி
திங்கள், மார்ச் 23, 2009 | 0 Comments